Friday, February 11, 2011

காதல் நினைவுகள்

(காதலர் தின சிறப்பு கவிதை)

உனக்கு நினைவு இருக்கிறதோ
இல்லையோ...எனக்கு
நன்றாக நினைவிருக்கிறது
அன்றொரு நாள்...



ரோஜாப்பூவில் உறவாடும் முட்களாய்
நானும் நீயும்...
இரவுப்பொழுதில் நிலவொளி
உன் முகத்தில் படர
இரு நிலவுகள் தெரிந்த அதிசயம்
நிகழ்ந்ததே..! இன்னும் சொல்லவா

வானில் உள்ள நிலாவை விட
ஒரு படி மேல் அழகாய்...
பூமியில் தெரிந்தது உன் நிலவு முகம்

பவுர்ணமியிலும்
பிறைசூடின உன் கண்கள்!
தேனாய் இனித்தது நீ தந்த
தேனீர் மட்டும் அல்ல..!
அந்த ஒவ்வொரு
நொடிப்பொழுதுகளும் தான்!

வாயில் இருந்து
வார்த்தைகள் வெளிவரும் முன்னே
தந்தியடித்தது என் இதழ்கள்!
அப்போது
உன் பால்வண்ண மேனியில்
பருவ இதழ்கள் இதமாய்
ஒன்றையொன்று தழுவிக்கொண்டன

உன் வளைகரங்களை பள்ளிகொள்ள
படர துடித்தது என் கைகள்!
களுக் கென்று சிரித்த
உன் சிரிப்புகள் அத்தனையும்
என்னை அணுஅணுவாய்
கொன்றதே மெல்ல!
அடி ரதியே..!
நீ பேசுவாய் பேசுவாய்
என்றல்லவா நான்
காத்திருந்தேன்...

உன் இதழ் பூத்த
அந்த குறுநகையில்
என் கண்கள் இரண்டும்
கிறங்கி விட்டன.
சொர்க்கம் தூரம் இல்லை
கைக்கு எட்டும் தூரம்தான்
என்றது உன் நயனவிழிகள்.

இளநகையே...
மலருக்கு மலர் தாவும்
வண்டல்ல...நான்..!
உன் அழகில்
மதிமயங்கியதால்,
எனது மனம் இப்போது
உன்னில் சிறைபட்டுவிட்டன.

இனி எப்படி நான்
தாவ முடியும்.
என்னை ஆயுள் கைதியாக
ஆக்கிவிட்ட உனக்கு
நான் எப்படி
நன்றி சொல்வேன்?

காதல் காதல் என்று
காதில் ஓதுவாய்
என்று நினைத்த எனக்கு
நீ விடும் மூச்சு
அத்தனையும் என்
காதில் நீ ஓதாமலே
தேனாய் ஒலிக்கிறதே!
இந்த மாயவித்தைகளை
நீ எங்கு கற்றுகொண்டாய்?
என் தேவதையே!

ஏ...காதல் ராட்சஷியே
ஆனால் ஒன்று மட்டும்
நிச்சயமாய் சொல்வேன்...
உனக்கு கொஞ்சம்கூட
இரக்கமே கிடையாது என்று!

உன்னைப் பார்த்த
ஒவ்வொரு நொடியும்
கண்ணைக்கூட இமைக்க மறந்தேன்.
இமையாமல் இருந்ததால்தானோ
எனக்கும் கொஞ்சம் மயக்கம்.
அதை உன்னிடம் சொல்லவும்
தயக்கம்..!

உன் வளைவுநெளிவுகளில்
நாணி நழுவிய ஆடைகளால்
என்னில் இரங்காமல்
கிறக்கங்களைத் தந்துவிட்டாயே
அடி கள்ளியே..!

உன்னை வர்ணிக்க
வேண்டுமென்றால்,
இந்த கவிதைக்கு
முடிவே இல்லாமல்
போய்விடும். அதனால்
உறங்காது பரிதவிக்கும்
வார்த்தைகளுக்கு அணைபோட்டுவிட்டு
மவுனங்களை மட்டும் வரவேற்போம்.

நீ என்னை விட்டு
இப்போது எங்கு சென்றாய்
என்று எனக்குத் தெரியவில்லை
ஆனாலும்,
மனதில் உள்ளது இன்னும்
உன் காதல் பதிவுகள்
புத்தம் புதிய காப்பியாய்...

பாரதிசங்கர்
-

0 Responses to “காதல் நினைவுகள்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby