Thursday, February 10, 2011

காதல்...காதல்...காதல்...

காதல்...
இந்த  மூன்றெழுத்து மந்திரச் சொல் தான் இன்று உலகையே ஆண்டு கொண்டு இருக்கிறது.
அன்பின் அதிசய  நீரூற்று தான் இந்த காதல். காலத்தால் நவீனங்கள் எவ்வளவுதான் மாறினாலும், காதல்  என்ற உணர்வு என்றும் மாறுவதில்லை. அதை யாராலும் மாற்றவும் முடியாது என்று தலைநிமிர்ந்து  நிற்கிறது காதல்.


காதல் என்ற வார்த்தையின் பொருள் தான் என்ன?


சிறுகுழந்தைகளுக்கு மண்ணின் மேல் காதல். அதனால் தான் மண்ணைக் கண்டதும் வாயில் எடுத்துப்  போட்டுக்கொள்கிறது. சிறுவர்களுக்கு விளையாட்டின்  மீது காதல். இளைஞர்களுக்கு.......?
 அவர்கள் தான் இந்த காதலுக்கு என்று இலக்கணம்  சூட்டுபவர்கள். நேற்றைய சிறுவர்கள் தான்  இன்றைய இளைஞர்கள். நாளை இவர்கள் பெரியவர்கள் ஆகப் போகிறார்கள் என்பதை  மறந்துவிடக்கூடாது. காதலின் கண் தன் கண்ணை ஒப்படைக்கும்போது, கடமையின்கண் தன்னை  மறந்து போய்விடக்கூடாது.

காதல் என்பது ஒருவர் மட்டும் சொந்தம் கொண்டாடி விட முடியாது. உணர்வுகள் உள்ள ஒவ்வொரு  மனிதனும் ஆனந்தமாகக் கொண்டாடலாம். எங்கும், எப்போதும், எதிலும் காதல் என்ற அந்த வார்த்தை  சுவாசமாய், நம் உடலில் வலம் வந்து கொண்டே இருக்கிறது.

மனிதனுக்கு மட்டும் தான் இந்த காதல் சொந்தமா? இல்லை...இல்லை. மரங்களுக்கும் சொந்தம். 
வண்டுக்கு மலர்களின் மீது காதல். 
வானுக்கு நிலவின்மீது  காதல்.
கடலுக்கு அலையின் மீது காதல்.
காற்றுக்கு யார்மீது காதல்?
அதனால் தான் பெண்ணே
உன்னை காற்றாய் வந்து
காதலிக்க ஆசைப்படுகிறேன்.
ஒருமுறை சுவாசித்து விடு
என்னை...நான் கலந்துபோகிறேன்
உன்னில்...!

காதல் என்பது வெறும் உடல் பசியை  மட்டும் தணிப்பதற்கல்ல. இருமனங்களின் சங்கமம். இந்த  உலகில் உள்ள அனைத்து உயிர்களிடமும்  பரிபூரணமாக சங்கமிக்க நடத்தப்படும் ஒரு உன்னதமான  ஒத்திகை. காலம் உள்ள வரை காதல் வாழும் என்பதில் இனியேதும் ஐயமில்லை.

மனம், உடல் கடந்த  பேரின்ப நிலையை காதல் தருவதால்தான், அன்றே கோபியர்கள் கூட கண்ணனை  காதலித்துள்ளனர். ரங்கநாதரை எண்ணி உருக உருக ஆண்டாளும் காதலித்து இருக்கிறார்.
காதல் என்பது உடலில் சுரக்கும் ரசாயனப் பொருட்களால், உருவாகும் உணர்வு தூண்டல் என்கிறது அறிவியல்.

பொய்யும், புரட்டும்
குறும்பும், சிரிப்பும்
தவிப்பும், பிரிவும்
ஊடலும், கூடலும்
அன்பும், அரவணைப்பும்
ஆறுதலும், ஆவேசமும்
இன்பம் என்ற
தேனோடையில் நீந்தி
வரும் மலராய்....
வாழ்க்கை என்ற படகில்
பவனி வருகிறது காதல்!

ஒற்றைச் சொல்லில் காதலின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால், அதுதான் எங்கள் மூச்சு என்கிறது இன்றைய இளைஞர் பட்டாளம்.
அது இருக்கட்டும்....யார் தான் உண்மையாய்... காதலிக்கிறார்கள்?
காதலிக்கு தெரியாத பல உண்மைகள், காதலனு-க்குத் தெரியாத பல உண்மைகள், காதலிக்கும் போது தெரியாத பல உண்மைகள் காலத்திற்கு மட்டும் தெரியும்.
தயவு செய்து காலத்திற்கு தெரியாது என்று காதலுக்கு களங்கத்தை உண்டாக்கி விடாதீர்கள். காதல் புனிதமானது. உயிர்களை மேம்படுத்துவது. மண்ணில் மனிதம் தழைத்தோங்கச் செய்யும் மகாமந்திரம்.
இன்னும் புரியாத பல புதிர்களுக்கு விடையைச் சொல்லித் தந்து கொண்டு இருப்பது நாம் ஒவ்வொன்றையும், காதலித்துச் செய்வதால்தான்.

கவிதையைக் காதலியுங்கள்
கவிஞராகி விடுவீர்கள்
அறிவியலை காதலியுங்கள்
விஞ்ஞானியாகி விடுவீர்கள்
மலரைக் காதலியுங்கள்
மென்மையாகி விடுவீர்கள்
மனதைக் காதலியுங்கள்
மனிதராகி விடுவீர்கள்!
உங்கள் சுவாசமாய்...
உங்கள்  மூச்சாய்...
உங்கள் பேச்சாய்...
உங்கள் தோழனாய்...
உங்கள் காதலாய்...
உங்கள் காவியமாய்...
இன்னும் பல
சிகரங்களை நோக்கி
அடியெடுத்து வைக்க
ஆசைப்படுகிறேன்.
இது தான் இளைஞர்களின்
காதலாக இருக்க வேண்டும்
இது அரங்கேறும்
நாட்கள் வெகுதூரமில்லை.
தொட்டு விடும்தூரம்தான்..!

நண்பர்கள் அனைவருக்கும்
காதலர்தின நல்வாழ்த்துக்கள்
அன்புடன் பாரதிசங்கர்.

0 Responses to “காதல்...காதல்...காதல்...”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby