Monday, March 7, 2011

பெண்களை பெருமைப்படுத்தும் எம்.ஜி.ஆர்.

மார்ச் 8: மகளிர் தினம் (சிறப்புக் கட்டுரை)
தான் நடிக்கும் படத்தில் தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ அதேபோல் தன்னுடன் நடிக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார், எம்.ஜி.ஆர்.


உதாரணமாக, அவர் நடித்துள்ள பல படங்களில் காணலாம். தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தாய்க்குத் தலைவணங்கு, தாய்க்குப் பின் தாரம் என்று தாயின் பெருமைகளை மையப்படுத்தியே பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் தெய்வத்தாய்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்தபின்னாலே பேச்சிருக்கும்,
உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்
கடமை... அது கடமை..!

தொடர்ந்து அதே பாடலில் இடம்பெறும் வைரவரிகள் தான் இவை..

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வர வேண்டும் தோழா..!
பாதை மாறாமல் பண்பு குறையாமல்
பழகி வர வேண்டும் தோழா...
மாலை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழைமுகம் மாற்று தோழா..!
அன்பே உன் அன்னை...
அறிவே உன் தந்தை..
உலகே உன் கோவில்
ஒன்றே உன் தெய்வம்..!
என்று விரிகிறது அந்த தத்துவ பாடல்.

 இந்த பாடலுக்கு  எம்.ஜி.ஆர். திரையில் நடிக்கும்போது ரசிகர்கள்  இன்றும் தங்களை மறந்து ஆட்டம் போடுவதைக் காண முடிகிறது. தெய்வத்தாய் என்ற அந்த திரைப்படத்தில் தாயின் பெருமையை எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார், இயக்குநர் பி.மாதவன்.

ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் குளிரில்லை.
அவள் இல்லாமல் நான் இல்லை...
நான் இல்லாமல் அவள் இல்லை..!

என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆர், சரோஜாதேவியுடன் சேர்ந்து ஆட்டம்போடும்போது, இளைஞர் பட்டாளமும் சேர்ந்து ஆட்டம் போட்டு குதூகலிக்கிறது.
திருமணத்திற்கு முன் காதலிக்கும்போது இருக்கும் ஒற்றுமை, கணவன், மனைவியானதும் எப்படி காணாமல் போகிறது என்பதை விளக்கும் வகையில் ஒத்திகையாக நடிக்கும் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி ஜோடி, திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கப்போகும் இளசுகளுக்கு சரியான பாடம் தான்.

படத்தில்  கருத்தாழமிக்க  வசனங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக எழுதியிருக்கிறார், இன்றைய இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்.
கணவன் கெட்டவன் என்று தெரிந்தும் காவல்துறையில் உயர் அதிகாரியாக பணிபுரியும் தன் மகனிடம், அவரைக் காட்டிக் கொடுக்காமல், கணவனிடம் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றி, இறந்து போகும் தாயின் பெருமைக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை அழகாக சித்தரிக்கிறது படம்.

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ, இந்தப் புன்னகை என்ன விலை போன்ற மனதை மயக்கும் ரம்மியமான காதல் பாடல்களும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
காலத்தால் அழிக்க முடியாத எம்.ஜி.ஆரின் திரைப்படப்பாடல்களில் உள்ள கருத்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் வகையில் புத்தம் புதிதாய் பளிச்சிடுகின்றன.

0 Responses to “பெண்களை பெருமைப்படுத்தும் எம்.ஜி.ஆர்.”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby