Tuesday, January 25, 2011

பிரமிக்க வைத்த 62வது குடியரசு தின விழா

ஆகஸ்ட்15, 1947&ம் தேதியன்று நள்ளிரவில் இந்தியாவிற்கு  சுதந்திரம் கிடைத்தது. மாபெரும் தலைவர்கள் ரத்தம் சிந்தி பாடுபட்டு வாங்கித்தந்த சுதந்திரம் அது. அதற்கு பின் குடியரசு தினம் ஜனவரி, 26 1950முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் இருந்துதான் இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தது. இன்று 62வது குடியரசுதினத்தை நாம் கொண்டாடி வருகிறோம்.


இன்று காலை சென்னை கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பை பார்க்கச் சென்றேன். அப்பப்பா எவ்வளவு கூட்டம்..!
சாதி, மதம், இனம், மொழி பேதம் கடந்து வந்திருக்கிறது என்பதை நான் கூட்டத்தைப் பார்த்த உடனே புரிந்து கொண்டேன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்னை கடற்கரை சாலை முழுவதும் உற்சாகமாக திரண்டு இருந்தனர். தேசியக் கொடி படம் வரைந்த தொப்பி, பேட்ச், தேசியக்கொடி போன்றவற்றை கையில் ஏந்தி, நீலக்கடலின் ஓரத்திலே, மகிழ்ச்சிக்கடலாய் ஆர்ப்பரித்தனர். அனைவரும் இந்தியரே என்ற நம் மண்ணுக்கே உரிய வேற்றுமையில் ஒற்றுமையை இன்று தான் நான் கண்ணாரக் கண்டேன். நானும் அவர்களில் ஒருவனே என்று நினைக்கையில் பூரிப்படைந்தேன். நாம் எத்தகைய மண்ணில் பிறந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பெருமிதம் கொண்டேன்.
சரியாக, காலை 8.15 மணிக்கெல்லாம் உறுமிக்கொண்டு தாழப்பறந்து வந்த ராணுவப்படை ஹெலிகாப்டர் மலர்கள் தூவி மக்களை வரவேற்றது.
அதன்பிறகு அடுத்தடுத்து அணிவகுப்புகள் வலம் வந்தன. தரைப்படை, குதிரைப்படை, பேண்ட் வாத்தியக்குழு, காவல்துறைக்குழு, நடனக்குழு, தேசிய மாணவர் படை என்று அனைவரும் சீருடை அணிவகுப்பில், வண்ணமயமாக காட்சியளித்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். இளைஞர்களில் சிலர் முகத்தில் மூவர்ணக்கொடியையும், இந்தியாவையும் வரைந்து வந்து கூட்டத்தினரைத் திரும்பி பார்க்க வைத்தனர்.
இதுவரை சுதந்திர தினவிழா, குடியரசுதினவிழா என்றால், பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றி, ஆசிரியர்கள் உரையாற்றுவார்கள். கலைநிகழ்ச்சிகள் நடக்கும். இறுதியில் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தி, தேசிய கீதம் பாடி விழாவை நிறைவு செய்வர். விழாவின் முடிவில் இனிப்புகள் வழங்கப்படும். இதைத்தான் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பார்கள்.  அப்போதெல்லாம் தெரியாத நாட்டுப்பற்று, இன்று கண்ணால் காண முடிந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதே ஒற்றுமை ஒவ்வொருவருடைய வாழ்விலும் நீடித்து இருந்தால், பிரச்சினைகள் அனைத்தும் விடுதலையாகி நம் வாழ்விற்கும் முழுசுதந்திரம் கிடைக்குமே..!
 குடியரசு தினத்தில் தான் இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தது. நாமும் நமது வாழ்வை செம்மைப்படுத்தும் சில சட்டங்களை இன்று முதல் நமக்குள் அரங்கேற்றுவோம். நாட்டை வல்லரசை நோக்கி இயக்கி, வளம் மிக்கதாக மாற்றுவோம்.
வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்..!

1 Responses to “பிரமிக்க வைத்த 62வது குடியரசு தின விழா”

Unknown said...
January 26, 2011 at 2:40 AM

best &fine


Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby