Thursday, March 17, 2011

காஞ்சிபுரம் விசிட்

(பயணக்கட்டுரை)
கோவில்களின் நகரம்  என்றாலே காஞ்சிபுரம் தான் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தடுக்கி விழுந்தால் கூட அங்கு ஏதாவது ஒரு கோவில் இருக்கும். இங்கு புகழ்பெற்ற கோவில்கள் மட்டும் மொத்தம் 165 கோவில்கள் உள்ளன. காஞ்சிபுரம் பட்டு உலகப் பிரசித்திப் பெற்றவை. அறிஞர் அண்ணா பிறந்த  ஊரும் இதுதான்.



அவற்றில் சிறப்பு வாய்ந்த 4 கோவில்கள் இவை.
காஞ்சி காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், கைலாசநாதர், வரதராஜபெருமாள்.

காஞ்சி காமாட்சியம்மன் கோவில்

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்று அனைவராலும் சொல்லப்படுவதுண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் இது. இந்தக் கோவிலை ஆதிசங்கரர் 8&ம் நூற்றாண்டில் கட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன.
காமாட்சி அம்மன் ஒரு கையில் கரும்பையும், மற்றொரு கையில் கிளியையும் ஏந்தி, பத்மாசனத்தில் வீற்றிருப்பாள்.அவளது உக்கிரத்தை தணித்தவர் தான் ஆதிசங்கரர்.
இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் தெப்பக்குளமும், 100 கால் மண்டபமும் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் இருந்து பார்த்தால், தங்கத்தால் வேயப்பட்ட கோபுர விமானம் தகதகவென்று காட்சியளிக்கும்.

ஏகாம்பரநாதர் கோவில்


விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்த கோபுரம் இந்தக் கோவிலில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஒன்று. 2&ம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவிலுக்கு பிற்பட்டது இந்தக் கோவில்.
இந்தக் கோவிலில் காணப்படும் மற்றொரு அதிசயம் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய மாமரம். இந்தக் கோவிலில் 1008 சிறிய சிவலிங்கங்களுடன் உள்ள பெரிய சிவலிங்கம் ஒன்று காண்பவர்களை வியக்க வைக்கிறது. மேலும் பல்வேறு வடிவங்களில் சிவலிங்ககங்கள் கோவிலைச் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளன.

வரதராஜப் பெருமாள் கோவில்

இது வைணவத் திருத்தலங்களில் ஒன்று. 31வது திவ்ய தேசம் இது. முதலாம் குலோத்துங்கச் சோழனும், விக்கிரம சோழனும் இந்தக் கோவிலை விரிவுபடுத்தியுள்ளனர். அவர்களுக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியவற்றைக் கட்டினர். கல்யாண மண்டபம் 8 வரிசைகளைக் கொண்டது.

ஒவ்வொரு வரிசையிலும் 12  தூண்கள் உள்ளன. அவற்றில் 96 சிற்பக்கலைகள் இடம்பெற்றுள்ளன. ஒரே கல்லால் ஆன  தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள், பல்வகை சிற்பங்கள் இந்தத் தூண்களை அலங்கரிக்கின்றன. மற்றொரு அதிசயம். 100 கால் மண்டபம். இந்த மண்டபத்தின் நான்கு முனைகளிலும் கல்லால் ஆன சங்கிலிகள் தொங்க விடப்பட்டுள்ளன. கிழக்குக் கோபுரம் 9 நிலைகளில், 180 அடி உயரத்துடன் காணப்படுகிறது.

இந்தக் கோவிலில் தங்கப்பல்லி ஒன்று அச்சு அசலாக பல்லியைப் போன்றே சுவரின் மேற்புறத்தில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்லியைத் தரிசிப்பவர்களுக்கு பல்லி சம்பந்தமான அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன என்பது பக்தர்களின் ஐதீகம்.

கைலாசநாதர் கோவில்


தென்திசை கைலாயம் என்று அழைக்கப்படும் சிறப்புடையது இந்தக் கோவில்.
ராஜசிம்மன் கட்டிய அழகிய சிற்பங்களைக் கொண்டுள்ளது. இவர் முதலில் கட்டியது மாமல்லபுரம் கடற்கரைக் கோவில். பல்லவர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டு இந்தக் கோவில். அழகிய நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய உட்பிரகாரம் காணப்படுகிறது. அங்கு ஒருவர் மட்டும் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் அமைதியான இடம் சிற்பங்களுக்கு இடையே செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலின் உள் கைலாசநாதரைத் தரிசித்து விட்டு வருவதே விசேஷம்தான்.

கைலாசநாதரைத் தரிசித்தபின்னர், அதன் உட்பிரகாரத்தைச் சுற்றுவதற்கான  நுழைவாயில் குகையைப் போன்ற குறுகலான அளவில் உள்ளது. நுழைந்து உட்பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வெளியே வரும்போது அதன் வெளிவாயிலும் குகைபோன்று தரையோடு தரையாக ஒட்டியுள்ளது. வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகள் நேர்ந்தாலும் சமாளிக்க வேண்டும் என்பதையே இந்த அமைப்பு காட்டுவதாக அமைந்துள்ளது.
===

0 Responses to “காஞ்சிபுரம் விசிட்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby